பல வகையான காரணங்களால் முடி உதிர்தல் அனைத்து பெண்களுக்கும் பொது குறைபாடு என்று ஆகிவிட்டது. எவ்வளவு மருத்துவ முறைகள் வந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு என்று ஒன்றும் இல்லை.
நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல், சரிவிகித உணவு உட்கொள்ளுதல், சுத்தமான சுகாதாரமான இடங்களில் வசித்தல் மற்றும் தலைமுடியை சரியாக பராமரித்தல் இது போன்ற காரணங்களை ஊக்குவிக்கும் போது மட்டுமே நமது தலை முடி அழகாகவும் அடர்த்தியாகவும் பராமரிக்க முடியும்.
தலைமுடியை பராமரித்தலில் தலைக்கு தேய்க்கப்படும் எண்ணெய் முக்கியமான ஒன்று. அந்த வகையில் செம்பருத்தி ஆனது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து அளித்து கருமையாகவும் நீண்டதாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு உதவுகிறது.
செம்பருத்தி பலமுறைகளில் தலைக்கு உபயோகப்படுத்தினாலும் செம்பருத்தி எண்ணெய் இன்னும் சற்று அதிக பலனை அளிக்கும்.
செம்பருத்தி எண்ணெயின் பயன்கள்:
செம்பருத்தி எண்ணையை தலையில் தொடர்ந்து தேய்த்து வரும் பொழுது அதை தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து உறுதியான தலைமுடி வளர்வதற்கு ஏதுவாகிறது மேலும் இது தலையில் உள்ள பொடுகுக்கு ஒரு நல்ல தீர்வாகும் இது தலையில் உள்ள பொடுகை சரி செய்து தலைமுடி உதிர்வதை தடுக்கிறது
தலைக்கு குளிக்கும் பொழுது தலையில் ஷாம்பு போட்டு தண்ணீர் ஊற்றும் பொழுது சில துளிகள் செம்பருத்தி எண்ணெய் சேர்த்துக் கொண்டு தண்ணீர் ஊற்றினால் அது தலை முடிக்கு ஒரு நல்ல போஷாக்கை கொடுக்கும். கண்டிஷனருக்கு பதிலாக இம்முறையை பயன்படுத்தலாம்.
செம்பருத்தி எண்ணெய் முடியின் வேர்க்கால்களில் ஒரு நல்ல பசையை உருவாக்குகிறது. இதனால் தலைமுடியின் வறட்சி நிலை தடுக்கப்படுகிறது. தலை முடியை எப்பொழுதும் மிருதுவாக வைத்திருக்க இது உதவும்.
வியர்வையினால் ஏற்படும் அலர்ஜி ஒவ்வாமை வறண்ட முடி போன்ற அனைத்து காரணங்களுக்கும் செம்பருத்தி எண்ணெய் ஒரு நல்ல தீர்வாக பார்க்கப்படுகிறது.
மேலும் செம்பருத்தி எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு பொருள் தலையில் உள்ள எரிச்சல் அரிப்பு ஆகியவற்றை நீக்கி பயனளிக்கிறது.
அதிக பலன்கள் தரக்கூடிய இந்த செம்பருத்தி எண்ணெய் எவ்வாறு தயாரிப்பது என்பது கீழே பதிவிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணெயை தயாரித்து நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது உங்கள் தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தை விரைவிலேயே காணலாம்.
தேவையான பொருள்கள்:
தேங்காய் எண்ணெய் - கால் லிட்டர்
நாட்டுச் செம்பருத்தி பூ - 30
நாட்டுச் செம்பருத்தி இலை - 10
உணவில் சேர்க்கப்படும் லட்டு கற்பூரம்
(சிறிதளவு )
வெந்தயம் - சிறிதளவு
அனைத்துவித மருத்துவத்திற்கும் நாட்டுச் செம்பருத்தி பூ மற்றும் இலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஹைபிரிட் வகைகளை முழுவதுமாக தவிர்க்கவும். நாட்டுச் செம்பருத்திப் பூவை செடியை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம் நாட்டு செம்பருத்தி இலைகள் அடர்ந்த பச்சையாகவும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும் நாட்டுச் செம்பருத்தி பூ மிகவும் மிருதுவானதாகவும் ஐந்து முதல் ஆறு வரை இதழ்களை கொண்டிருக்கும்.
செய்முறை:
செம்பருத்தி பூ மற்றும் இலைகளை பறித்து அதனை சுத்தமான நீரில் கழுவி நன்கு உலர வைக்க வேண்டும். வெயிலில் காயவைக்க கூடாது. நிழலில் ஈரம் போகும் வரை உலர வைத்தால் போதுமானது. சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைத்தால் மிகவும் நல்லது. அடுப்பு பற்ற வைத்து அதில் நல்ல கனமான இரும்புச்சட்டியை வைக்க வேண்டும். இரும்பு சட்டியில் காய்ச்சப்படும் எண்ணெய் நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம். சட்டி சூடு ஏறியவுடன் எண்ணெயை ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும். அடுப்பு அதிகமாக எரியக் கூடாது அதே சமயம் மிகவும் குறைவாகவும் எறிய கூடாது மிதமான அளவில் எரிய வேண்டும். மிதமான வெப்பத்தில் எண்ணெய் சூடாகும் வரை காத்திருக்கவும். இந்த எண்ணெய் காய்ச்சுவதற்கு விறகு அடுப்பு பயன்படுத்துதல் நல்லது.
எண்ணெய் சூடு ஆவதற்கு முன்பும் மிகவும் சூடு ஏறின பிறகும் பொருட்களை சேர்க்கக்கூடாது. மிதமான சூட்டில் சுத்தம் செய்யப்பட்ட செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை அதில் சேர்க்க வேண்டும். பூக்களை சேர்ப்பதற்கு முன்பு பூவிலிருந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும் மகரந்த குழல்களை தனியே எடுத்து விட வேண்டும். பின்பு இலை மற்றும் பூவின் நிறம் மாறும் வரை மிதமான சூட்டில் வைத்திருந்து விட்டு நிறம் மாறியவுடன் இளஞ்சூட்டில் அடுப்பை குறைத்து வைத்துக் கொள்ளவும்.
சிறிது நேரம் கழித்தஉடன் பூ மற்றும் இலைகளின் நிறம் மாறிவிடும். அப்பொழுது சிறிதளவு வெந்தயத்தை சேர்க்கலாம். குளிர்ச்சி அதிகமாக ஒத்துக் கொள்ளாதவர்கள் வெந்தயத்தை தவிர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் சேர்க்கும் போது எண்ணெய் மணமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். எண்ணெய் வற்ற தொடங்கியுடன் இறக்கி விட வேண்டும். இப்பொழுது அந்த லட்டு கற்பூரத்தை சிறிதளவு பொடியாக்கி சேர்த்து விட வேண்டும். லட்டு கற்பூரம் மணத்திற்காக மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். இது தலைமுடியின் வளர்ச்சியில் எவ்வித பெங்களூர் இல்லை எனவே தேவைப்படாதவர்கள் தவித்துக் கொள்ளலாம். இது கடைகளில் விற்கப்படும் எண்ணெய் போன்று சிவப்பு நிறத்தில் இருக்காது. இந்த எண்ணெயை ஒரு நாள் முழுவதும் அப்படியே அந்த சட்டியில் வைக்க வேண்டும் மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். ஒரு நாள் கழித்து கழித்து வடிகட்டி காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேகரிக்க வேண்டும்.
வாரத்துக்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தலைமுடியின் வேர்க்கால்களின் நன்கு படுமாறு மசாஜ் செய்ய வேண்டும். நன்கு ஊற வைத்த பிறகு குளித்து விடலாம். இந்த எண்ணெய் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது. எனவே சளி தொந்தரவு உள்ளவர்கள் பார்த்து உபயோகிக்க வேண்டும்.
கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைப்பதால் இந்த எண்ணெய் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். அதற்கு மேல் நீண்ட நாள் உபயோகிக்க நினைப்பவர்கள் டபுள் ஃபாய்லிங் முறையில் சூடு செய்து உபயோகிக்கலாம். இந்த முறையில் எவ்வாறு எண்ணையை சூடு செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டபுள் ஃபாய்லிங் முறை:
இம்முறையில் நாம் சூடு செய்யப்படும் பொருள் நேரடியாக அடுப்பில் வைக்கப்பட தேவையில்லை. மாறாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அடுப்பில் வைத்து தண்ணீர் சூடானதும் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்த தண்ணீருக்கு நடுவில் எண்ணெய் பாத்திரத்தை வைக்க வேண்டும். அதாவது தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் நடுவே எண்ணெய் இருக்கும் பாத்திரத்தை வைக்க வேண்டும். தண்ணீர் சூடாகும் பொழுது எண்ணெய் இருக்கும் பாத்திரமும் சூடாகும். அப்போது தேவையான சூடு வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சூடு ஆறியவுடன் பழையபடி கண்ணாடிபாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
அல்லது வெயிலில் அடிக்கடி எடுத்து வைத்து உபயோகித்தாலும் நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம். மூன்று மாதங்கள் வரை உபயோகித்தல் சிறப்பு.
இதைத் தொடர்ந்து உபயோகித்து வரும் பொழுது தலைமுடி கருமையாக வளர்ச்சி அடைய தொடங்கும். இரண்டு மூன்று மாதங்கள் உபயோகப்படுத்தி விட்டு பலன் இல்லை என்று நிறுத்தக்கூடாது. ஆறு மாதங்களுக்கு மேல் உபயோகித்து வரும் பொழுது மட்டுமே மாற்றம் ஏற்படத் துவங்கும்.
இது போன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment