நம் நாட்டில் பல வகையான தொழில்கள், வேலை வாய்ப்புகள் என இருந்தாலும் ராணுவத்தில் பணியாற்றுவது அனைவரின் கனவாகவும் மதிப்பிற்குரிய வேலையாகவும் பார்க்கப்படுகிறது. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் பாதுகாப்புத்துறை வீரர்களை பார்க்கும் பொழுது ஏற்படும் அல்லது கொடுக்கப்படும் மரியாதை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. நமது ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் தங்கள் உயிரை துச்சமாக நினைத்து இந்திய மக்களுக்காக நம் நாட்டின் பாதுகாப்புக்காக ஓய்வு எதுவும் இன்றி நாள் கணக்கு பாராமல் தங்கள் குடும்பத்தை விட்டு பாடுபடுகின்றனர்.
பல ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்கள் உயிரை நம் தாய் நாட்டுக்காக துறந்து இருக்கிறார்கள். இன்னும் நிறைய இளைஞர்கள் தாய் நாட்டுக்காக தன் உயிரை விடுவதற்கும் துணிந்து எல்லையில் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் நம் நாட்டு வீரர்கள் நம் நாட்டின் மீதும் நம் நாட்டு மக்களின் மீதும் கொண்டிருக்கும் பற்றும் மரியாதையும் தான். ராணுவத்தில் வேலை புரிவது என்பது சாதாரண விஷயம் அல்ல இந்தியாவின் எல்லையோரம் மற்றும் நிறைய பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் ராணுவத்தினால் தான் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடும் குளிர் மற்றும் கடும் வெப்பம் 24 மணி நேரமும் மழைப்பொழிவு போன்ற அனைத்து இடங்களிலும் தங்கள் உடல் நலனை கூட கவலை கொள்ளாமல் நமது வீரர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு புனிதமான ராணுவத்தில் நம் நாட்டை இளைஞர்கள் அதிகமாக சேர வேண்டும்.
நாட்டுக்காக தங்கள் உழைப்பை கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த நமது அரசு பலவகையான திட்டங்களை கொடுக்க உள்ளது. அந்த வகையில் பள்ளி கல்லூரிகளிலும் மாணவர்களை தேசிய பாதுகாப்பு படைகளில் சேர்ப்பதற்கு நிறைய விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறது. அதில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அக்னி பாதை திட்டம். ஒரு மிகச்சிறந்த திட்டம். இது இந்திய இளைஞர்களை நல்வழிப்படுத்தி தேசிய பற்றை அவர்களிடம் உருவாக்கி ஒரு சிறந்த எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
அக்னி பாதை திட்டம்
பயிற்சி மற்றும் பணி நியமனம்
சலுகைகள்
வயது
கல்வித் தகுதி
உடற்தகுதி
குறைகள்
அக்னி பாதை திட்டம்:
இந்திய ராணுவத்தில்சேர்நந்து நாட்டுக்காக பணியாற்றுவது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அந்த கனவை மேலும் எளிதாக மாற்றுவதற்கு இந்திய பாதுகாப்புத் துறையில் தரைப்படை கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளிலும் இளைஞர்களை சேர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம்தான் அக்னி பாதை திட்டம்.
அக்னி பாதை திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் ஆவர். இரண்டு வருடங்களுக்கு மேல் தேசிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் இரண்டு வருடங்களாக ராணுவத்தில் ஆள் சேர்க்காமல் பணியிடங்கள் காலியாக இருப்பதால் ராணுவத்தின் ஆள் பற்றாக்குறை மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கத்தால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் அதிகாரிகள் அல்லாத வீரர்களை மட்டுமே சேர்க்கப்பட உள்ளது.
பயிற்சி மற்றும் பணி நியமனம்:
பாதுகாப்பு அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. வருடத்திற்கு இருமுறை ஐம்பதாயிரம் வீரர்கள் வரை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுவர். ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு நான்கு வருடங்கள் பணியில் அமர்த்தப்படுவர். இத்திட்டம் டூர் ஆஃப் டியூட்டி எனவும் வழங்கப்படுகிறது. நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இதில் 25 சதவீதம் வீரர்கள் மட்டும் பகுதி மற்றும் சுய விருப்பத்தின் பேரில் நிரந்தரமாக ராணுவத்தில் பணிபுரிய நியமனம் வழங்கப்படும்.
சலுகைகள்:
அக்னி பாதை திட்டத்தில் நான்கு வருட பணிக்காலம் முடிந்து வெளியே வரும் பொழுது 10 லட்சம் பணம் எந்தவித வரி பிடிப்பும் இல்லாமல் வழங்கப்படும்..
வீரர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் பணி அனுபவச் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் இவர்களுக்கு பணியில் இருக்கும் வரை 48 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களும் விருதுகளும் அக்னி பாத் வீரர்களுக்கும் வழங்கப்படும்.
அக்னி பாதை திட்டம் நான்கு வருட பணிக்காலத்தை மட்டும் கொண்டதால் அதன் பின்பு வேலையிலிருந்து தொடர முடியாதவர்களுக்கு மத்திய அரசு மேலும் பல சலுகைகளை அளித்துள்ளது.
இவர்களுக்கு அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் CRPFல் சேர்வதற்கு மொத்த பணியிடங்களில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
வயது:
17.5 முதல் 21 வரை உள்ள அனைத்து ஆண் மற்றும் பெண்கள் அக்னிப்பாதை திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற தகுதியுடையவர்கள்.
கல்வித் தகுதி:
குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பயின்று இருக்க வேண்டும்.
உடற்தகுதி:
பொதுவாக ராணுவத்தில் அல்லது தேசிய பாதுகாப்பு படையில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னி பாதை திட்டத்திற்கும் பொருந்தும்.
இதில் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளிலும் வீரராக பணியாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
குறைகள் :
இது இளைஞர்களின் வேலை நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாக இருந்தாலும் இது அனைவராலும் ஆதரிக்கப்படவில்லை. காரணம் என்னவெனில் இது ஒரு நிரந்தர வேலை வாய்ப்பு கிடையாது.
ஆறு மாத பயிற்சி மற்றும் மூன்றரை வருடங்கள் பணி என்பது இவர்களின் மொத்த பணிக்காலம் ஆகும். இதில் அவர்கள் எந்த அளவுக்கு ஆயுதப் பயிற்சி மற்றும் பிற பயிற்சிகளை எடுத்து பணியமர்த்தப்படுவார்கள் அவர்களின் திறன் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை மதிப்பீட முடியாது.
இதில் 25 சதவீதம் மட்டுமே பணி நிரந்தரம் உள்ளது. இந்த 25 சதவீத வீரர்களின் விருப்பம் மற்றும் அவர்களின் பணித்திறன் ஆகியவற்றை பொறுத்து நிரந்தரமாக நியமிக்கப்படுவர். மற்ற வீரர்கள் பணியில் தொடர முடியாது. நிரந்தர பணியில் அமர்த்தப்படும் வீரர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும். அதாவது ஊதியம் ஓய்வூதிய சலுகைகள் என அனைத்தும் வழங்கப்படும். பணியில் தொடர முடியாத வீரர்களுக்கு வேறு பணிகள் வழங்குவது குறித்து அரசு எந்தவித அறிக்கையும் கூறவில்லை.
ராணுவ வீரர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை குறைப்பதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறி நாடு முழுவதும் ராணுவ ஆர்வலர்கள் போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும் படைவீரர்கள் உயர் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்தப்படுவதில்லை. மாறாக உதவியாளர் செவிலியர், டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இதனால் ராணுவத்தில் சேர்ந்து சாதிக்கும் நோக்கம் உடைய இளைஞர்களின் கனவு தடைபடுகிறது.
ஆனால் முப்படைகளில் கொடுக்கப்படும் ரேங்க் அக்னி பாத் வீரர்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு என்று தனி ரேங்க் உருவாக்கப்படும். இந்த அக்னிப் பாத் திட்டம் மக்களிடையே வெற்றியடையும் பொழுது பழைய கால ராணுவ ஆள்சேர்ப்பு முறை முற்றிலுமாக நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 22 வயதிலேயே வீரர்களின் பணிக்காலம் முடிவடையும் இந்நிலையில் இதற்கு பின்பு அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்க நேரிடலாம்.
மேலும் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு ஓய்வூதிய திட்டம் உள்ளது. ஆனால் அக்னி பாதை திட்டத்தில் பணிபுரிந்து வெளியே வரும் வீரர்களுக்கு எந்த ஒரு ஓய்வூதிய திட்டமும் சலுகைகளும் கிடையாது. நான்கு வருட பணிக்கு பின்பு அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாக வாய்ப்புண்டு.
இது போன்ற தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடரவும்.
சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment