என்னதான் ஒரு நெருக்கமான சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் உங்கள் மனது வேண்டியவரையோ வேண்டிய பொருட்களையோ நாட தான் செய்யும். எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உங்கள் மனது எந்தவித குறுக்கீடும் இல்லாமல் தனக்கு தேவையானதை நினைத்துக் கொள்கிறது. தனக்கு தேவையானதை அடையவும் முற்படுகிறது. அதனால்தான் மனது ஒரு குரங்கு போல என்பார்கள். நம் மனதால் ஒரு நேரத்தில் ஒரு எண்ணத்தை மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கவே முடியாது அதை போல் ஏதாவது ஒரு விஷயத்தில் திருப்தி அடையவும் முடியாது. எப்பொழுதும் குரங்கு போல தாவித்தாவி பாய்ந்து கொண்டே இருக்கும்.
உங்களைப் பற்றி நீங்களே இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால் தனிமையை நாடுங்கள். தனிமையில் நிறைய சிந்தியுங்கள் உங்களால் உங்களைப் பற்றி தெரியாத சில விஷயங்கள் கூட தனிமை உங்களுக்கு காட்டி கொடுத்து விடும். தனிமையில் சிந்திப்பது என்பது நீங்கள் உங்களிடமே பேசுவது போன்றது.
நீங்கள் தனியாக இருப்பதாக உணர்கிறீர்களா.. உங்களை தனிமைப்படுத்தப்பட்டதாக நினைக்கிறீர்களா... அல்லது நீங்கள் தனிமை விரும்பி என உங்களை வகைப்படுத்துகிறீர்களா...
கவனியுங்கள் .... உங்களை உங்களால் மட்டுமே தனிமைப்படுத்த முடியுமே தவிர வேறு யாராலும் அதை பண்ண முடியாது. கோபம், மகிழ்ச்சி, கவலை, துக்கம் இது போன்று தனிமையும் ஒரு உணர்வே.
அதை யாராலும் யாருக்கும் கொடுக்க முடியாது. உங்களிடம் இருந்து உங்கள் தனிமையை எடுக்கவும் முடியாது. நெரிசலான கூட்டமான இடங்களில் இருக்கும் பொழுதும் கூட உங்களை நீங்கள் தனிமையாக உணர முடியும். தனியாக யாரும் இல்லாத அரவமற்ற இடத்தில் இருந்தாலும் உங்களை தனிமை இல்லாத பிசியான ஒருவராக உணர முடியும்.
தனிமை உணர்வு எப்பொழுது வருகிறதென்றால் உங்களை நீங்கள் உணர முடியாத நிலையில், உங்களை நீங்கள் சோம்பேறியாக வைத்திருக்கும் பொழுது நீங்கள் அடுத்தவரின் கட்டளைக்கு இயங்கும் பொழுது, நீங்கள் அடுத்தவரின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முயன்று அது முடியாத பொழுது உங்கள் தனிமையை நீங்கள் உணர்கிறீர்கள். ஆக உங்களின் ஒரு வகை உள்ளுணர்வே உங்களின் தனிமையை தீர்மானிக்கிறது.
உங்களை மற்றவர்களால் தனிமைப்படுத்த இயலாது ஆயினும் நீங்கள் மற்றவர்களால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்கள் என்றால் அவர்களின் தனியுரிமையில் அதாவது பிரவேசியை நீங்கள் பாதிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அதாவது நீங்கள் அடுத்தவர்களின் தனிமையை பாதிக்காத வரை உங்களுடைய தனிமை பாதிப்பிற்கு உள்ளாகாது.
உதாரணமாக உங்களுக்கு காய்ச்சல் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களை யாராவது விசாரிக்க வேண்டும் அல்லது மாத்திரை மருந்து கொடுக்க யாராவது இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஆனால் யாரும் இல்லை எனில் அந்த இடத்தில் நீங்கள் தனிமையை உணர்வீர்கள். அதுபோல உங்களுக்கு வேண்டியவர் அல்லது யாரிடமிருந்து உரிமையை விரும்புகிறீர்களோ அவர் உங்களிடம் சொல்லாமல் ஏதாவது செய்து விட்டால் அங்கு நீங்கள் உங்கள் தனிமையை உணர்வீர்கள்.
இந்த இரண்டு உதாரணங்களிலும் ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள் முதல் உதாரணத்தில் தனிமையை நீங்கள் உருவாக்கிக் கொள்வது. இரண்டாவது உதாரணத்தில் தனிமையை நீங்கள் எடுத்துக் கொண்டது. ஆக உங்களை தனிமைப்படுத்துதல் என்பது உங்களால் மட்டுமே முடியும். அதை வேறு யாராலும் உங்களுக்கு கொடுக்க முடியாது.
அதுபோல தனிமை என்று உணர்வை சந்தோஷமானதாகவோ வருத்தமானதாகவோ எடுத்துக் கொள்ளவும் உங்களால் மட்டுமே முடியும்.
இங்கு தனித்திருப்பது என்பது நீங்கள் செய்வது. தனிமைப்படுத்தப்படுவது என்பது உங்களை மற்றவர்கள் செய்வதாக நீங்களே நினைத்துக் கொள்வது..
இளமையில் தனிமையே நாடுவர். முதுமையில் வரும் தனிமை மிகவும் கொடுமையானது. வயதான காலத்தில் கேட்பாரற்று நகரும் நாட்களில் வரும் தனிமை நோயை விட கொடுமையானது. அதே நேரத்தில் இளமையில் நம்மை சுற்றி நிறைய பேர் இருந்தாலும் சில சமயம் மனம் தனிமையை நாடும். அந்த தனிமை இனிமையானது...
நீங்கள் கவலையில் இருக்கிறீர்களா.. தனிமையை நாடுங்கள்... சிந்தியுங்கள் அதிலிருந்து வெளிவருவது எப்படி என்று நீங்களே உங்களுக்கு சொல்லித் தருவீர்கள்...
மகிழ்ச்சியில் இருக்கிறீர்களா அப்பொழுதும் தனிமையை நாடுங்கள் மகிழ்ச்சியில் சில நேரம் தவறுதலான முடிவுகளை எடுக்க நேரிடும்..
நீங்கள் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் எவ்வளவு உறுதியாக ஒரு முடிவை எடுத்தாலும் உங்களுக்கு சரியான முறையில் வழிநடத்துதல் கிடைத்தாலும் சரி... எதையும் தீர்மானிக்கும் முன்பு சற்று நேரம் தனிமையை நாடுங்கள்... தனிமையை விட சிறந்த தோழன் எதுவும் இல்லை...
இனிமையானதும் கொடுமையானதும் இரண்டற கலந்த ஒரு உணர்வு தனிமை...
இந்தப் பூவுலகில் யாரும் யாரையும் தனிமைப்படுத்த இயலாது. அதேபோல யாருக்கும் யாரும் துணையாகவும் இருக்க முடியாது. எல்லாம் நமது உள்ளுணர்வின் வெளிப்பாடு.... தனிமையாக இருக்கும் பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா.. கோபமாக இருக்கிறீர்களா.. வருத்தத்துடன் இருக்கிறீர்களா.. இதில் எது நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது வெளிப்படுகிறதோ அதுவே உங்கள் குணம். உங்களது உண்மையான குணம் தனிமையில் இருக்கும் பொழுது மட்டுமே வெளிப்படுகிறது.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் சாதாரணமாகவே நீங்கள் ஒரு மகிழ்ச்சியான நபர். உங்களது மகிழ்ச்சியை யாராலும் கொடுக்கவும் முடியாது.. மாற்றவும் முடியாது.. தனிமை என்பது வேறு ஒன்றும் அல்ல உங்களின் பிம்பமே...
இது போன்ற பதிவுகளில் தனிமையாக இணைந்திருப்போம். தொடர்ந்து பயணியுங்கள் எங்கள் பக்கத்தில்.. மேலும் சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்...






No comments:
Post a Comment