நீங்கள் கட்டும் வீடு சிறப்பானதாக அமைவதற்கு தேவையான விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாகவே வீடு கட்டும் அனைவருக்கும் எந்த வகையில் செலவை குறைப்பது கம்மியான பட்ஜெட்டில் எவ்வாறு கட்டுவது என்பது மட்டுமே முதன்மையான விஷயமாக இருக்கும். ஆனால் தண்ணீர், மின்சாரம், மணல், மண், பெயிண்ட், சிமெண்ட், செங்கல் மற்றும் பிற முக்கியமான கட்டுமான பொருட்கள், மின்சார பொருட்கள் என அனைத்திலும் அதன் தரத்தினை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.
மின்சாரம் மற்றும் தண்ணீர்
அடிப்படை வசதிகளான காற்றோட்டம், சுத்தமான தண்ணீர், போக்குவரத்து இவைகள் எல்லாம் நம் கட்டப் போகும் வீட்டில் இருக்கிறதா தெரிந்து கொண்டு வீடு மற்றும் மனை வாங்குவது சிறந்தது. அந்த வகையில் மிக முக்கியமாக மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு இருக்கிறதா என்பதை கட்டாயம் தெரிந்து கொண்டுதான் வாங்க வேண்டும்.
மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு ஆகிய வசதிகள் இல்லாத இடத்தில் அந்த வசதிகளை பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். அது மட்டும் இல்லாமல் ஒரு பெரும் தொகையையும் செலவிட நேரிடும். இது பெரும் வேலையை உருவாக்குவதோடு மன உளைச்சலையும் உருவாக்கும்.
ஆசை நிறைந்த கனவுகளோடு கட்டும் வீடானது அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டுவது எல்லோருக்கும் அதிருப்தியை உண்டு பண்ணும். எனவே மனை மற்றும் வீடு வாங்கும் போது இந்த வசதிகள் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு அதிலும் தண்ணி குடிப்பதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு உகந்த நீரா என்று சோதனையின் அடிப்படையில் தெரிந்து கொண்ட பின்னரே அந்த மனைகளை வாங்குவது சிறந்தது. மேலும் நீர் மாசுபாட்டின் காரணமாக நமக்கு கிடைக்கும் நீரானது அதிக வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. அதிக உப்பு நிறைந்த நீரில் வீடு கட்டும் பொழுது வீடு சீக்கிரத்தில் அரிப்புக்கு உள்ளாகலாம். இதனால் நீண்ட நாளைக்கு வீட்டின் தரம் வராமல் பாதிக்கப்படும். எனவே தண்ணீர் உப்பு இல்லாத வேதிப்பொருட்கள் கலக்காத நீர் என்பதை பரிசோதித்த பின்னரே அந்த இடத்தில் மனை கட்டுவது சிறந்தது.
தண்ணீருக்காக பொருத்தப்படும் மோட்டார் நவீன ரக ஆட்டோமேட்டிக் மோட்டார் பொருத்துவது நல்லது. ஏனெனில் இதனால் மோட்டாரின் வெப்பம் அதிகமாவது தடுக்கப்படும். அவ்வாறு ஒரு அளவிற்கு மேல் வெப்பம் அதிகரிக்கப்படும் பொழுது மோட்டார் தானாகவே நின்றுவிடும். இதனால் சீக்கிரம் மோட்டார் பழுதடையாமல் பாதுகாக்கப்படும். நவீன ரக மோட்டார்கள் மின் கசிவு ஏற்படாதவாறு தண்ணீர் உள்ளே போகாமல்
அமைக்கப்பட்டிருக்கும். எனவே மோட்டார் வாங்கும் பொழுது இதனை சரிபார்த்து கவனமுடன் வாங்க வேண்டும். முடிந்தவரை தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாத இடத்தில் மனைகள் வாங்காமல் இருப்பது நலம்.
சிமெண்ட்
கட்டிடம் வலுவானதாக அமைவதற்கு மற்றொரு முக்கியமான பொருள் சிமெண்ட். இந்த சிமென்ட் தேர்ந்தெடுக்கும் முன்பு நல்ல தரம், விலை மற்றும் பிராண்ட் அனைத்தையும் சரிபார்த்து வாங்க வேண்டும். சிமெண்டின் தரத்தைப் பொறுத்து தான் கட்டிடம் ஆனது வலுவானதாகவும் நீண்ட நாளைக்கு பிரச்சினை இல்லாமலும் இருக்கும்.
மணல்
சிமெண்டில் எந்த அளவு கவனம் கொள்கிறோமோ அதே அளவிற்கு மணலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது மணலில் அதிக கலப்படம் செய்து ஏமாற்று வேலை நடக்கிறது. பெரும்பாலும் வண்டல் மண் கலப்படமும் அல்லது கடல் மண் கலப்படமும் அதிக அளவில் உள்ளது. வண்டல் மண் கலந்து கட்டப்படும் வீடுகள் உறுதியானதாக இருக்காது. அது மழையினால் சேதாரம் அடையக் கூடும். அதேபோன்று கடல் மணலால் கட்டப்படும் வீடுகள் சீக்கிரத்தில் அரிப்புக்கு உள்ளாகலாம். தூசு, குப்பைக் கழிவுகள், சிலிக்கா போன்ற வேதிப்பொருட்கள் உள்ள மணல் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கலப்படம் இல்லாத தரமான மணலா என சோதித்து வாங்க வேண்டும். உங்கள் வீட்டை கட்டும் கட்டிட வல்லுநர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்கிறாரா.. என்பதை அவரிடமும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
செங்கல்
நல்ல தரமான செங்கலை உபயோகப்படுத்துவது இன்னும் கட்டிடத்திற்கு உறுதியை அளிக்கும். உங்கள் மனை உள்ள இடத்தில் இருக்கும் மண்ணைப் பொறுத்து செங்கற்களை தேர்வு செய்வது சிறந்தது. இப்பொழுது செங்கலுக்கு மாற்றாக பல வகையான கட்டுமான பொருட்கள் உள்ளன. இன்டர் லாக் போன்ற வகை கற்களை உபயோகப்படுத்தும் பொழுது கட்டிடத்தில் மொத்தத் தொகையில் கணிசமான தொகையை சேமிக்கலாம். எனவே நீங்கள் கட்டும் வீட்டிற்கு ஏற்றவாறு உள்ள செங்கலை தேர்வு செய்வது நல்ல பலனை கொடுக்கும்.
இரும்பு பொருள்கள்
வீடு கட்டுவதற்கு பல்வேறு நிலைகளில் பயன்படும் கட்டுமான பொருட்களில் இரும்பு கம்பிகளின் பங்கு அவசியமானது. எனவே இரும்பிலான பொருட்களை வாங்கும் முன் துருப் பிடிக்காத நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியதாகவும் விலை சற்று அதிகமாக இருந்தாலும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது எதிர்காலத்தில் வரும் அநாவசிய செலவை தவிர்க்கலாம்.
கட்டுமான பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி வைக்கும் பொழுது அதை உபயோகப்படுத்தாமல் போக அதிக அளவில் வாய்ப்புள்ளது. அது போல உபயோகப்படுத்தாமல் வீணாக்க நேரிடலாம். முடிந்தவரை நமது கண்காணிப்பு அதிகமாக இருக்கும் பொழுது கட்டுமான பொருட்களின் சேதாரத்தை வெகுவாக குறைக்க முடியும்.
பொதுவாகவே வீடு கட்டும் பொழுது அழகுக்கு முக்கியத்துவம் தருவதை விட தரத்துக்கும் உறுதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து அந்த வகையில் பொருட்களை உபயோகப்படுத்தும் போது வீண் செலவை குறைக்கலாம்.
நவீன கட்டுமான பொருட்களை பயன்படுத்தும் பொழுது வேலையின் அளவை கணிசமாக குறைக்கலாம். வேலையின் அளவு குறைக்கப்படும் பொழுது தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கலாம். இதனால் தொழிலாளர்களுக்கு செலவழிக்கப்படும் தொகையில் அதிக பணத்தை சேமிக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட காலக்கெடுவில் வீட்டை கட்டி முடிக்கலாம்.
நிறைய பேர் மிக அழகாகவும் தரமானதாகவும் வீட்டு கட்டி முடித்த பின்பு அதன் பின் உபயோகப்படுத்தும் பெயிண்டுகளை சரியாக தேர்வு செய்யாமல் விடுவதால் வீட்டின் வெளிப்புறம் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் வீட்டின் அழகினையும் கெடுத்து விடும். எனவே முடிந்தவரை பிராண்டட் பெயிண்டுகளை தேர்வு செய்ய வேண்டும். வீட்டின் உட்புறமும் நல்ல நிறங்களை தேர்வு செய்வதால் மன நிம்மதியை ஏற்படுத்தி சுமூகமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். வீட்டை நல்ல வெளிச்சத்துடன் காட்டும் வெளிர் நிற நிறங்களை தேர்வு செய்வது நல்லது. அடர்ந்த நிறங்கள் சோம்பலையும் வீட்டை இருட்டாகவும் காட்டும். பொருத்தமான நிறங்களை தேர்வு செய்வதும் நல்ல ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
இது போன்ற பயனுள்ள செய்திகளை பெறுவதற்கு எங்கள் பக்கத்தை தொடரவும். சந்தேகங்களுக்கு கமெண்டில் பதிவு செய்யவும்.






No comments:
Post a Comment